மாயமானைத் தேடி
மாயமானைத் தேடி - நீலநிலா செண்பகராஜன்

மாயமானைத் தேடி - நீலநிலா செண்பகராஜன்

நீல நிலா செண்பகராஜன் அவர்கள்  எழுதிய 13 வது நூல் மாயமானைத் தேடி... இந்த புத்தகத்தின் சிறப்பு என்னவெனில் இது முரண் டூவிட்டு வகையைச் சேர்ந்தது. தனது முன்னுரையில் இந்நூல் நான் கண்டுபிடித்துள்ள புதிய கவிதை வடிவம் என்று குறிப்பிடுகிறார். ஆம், இது ஒரு புது வகையான கவிதை. இந்தக் கவிதை இரண்டு வரிகளில் எழுதப்பட்டுள்ளது.  அதாவது இரு வரிகளில் முரண்களை உள்ளடக்கி எழுதப்படும் கவிதை. முதல் வரி ஒரு கருத்தையும் இரண்டாவது வரி அதற்கு எதிரான ஒன்றையும் சொல்கிறது.

கையளவு உள்ள இந்தக் கவிதைப் புத்தகத்தில் மொத்தம் 50 கவிதைகள் உள்ளன. இதே போல முரண் டூவிட்டு வகையை மருதம் கோமகன் அவர்களும் 'முள்மலர்' என்ற பெயரில் வெளியிட்டுள்ளார்கள். ஆனால் ஆசிரியரின் கவிதை இரண்டாவதாக வெளிவந்திருக்கிறது.

முரண் டூவிட்டு வகையில் முதல் கவிதை,

புழுக்கத்தைத் துடைத்தான்!
மொட்டை மாடிக் காற்றில்.

முதல் வரியில் புழுக்கமாக இருந்தது இரண்டாவது வரியில் மென் காற்றாக வீசுகிறது.

இருளில் விளக்கை ஏற்றினார்
பிரகாசமாக...

சலவை செய்த தொழிலாளி 
அழுக்குடன்

பார்வையை மறைத்தது
வெளிச்சம்.

மேற்கண்ட 3 கவிதைகளும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளன.

முரண் டூவிட்டு கவிதையாக இருந்தாலும் சில கவிதைகள் எனக்கு ஏதோ ஒன்று எனக்கு இடறுவதாக உள்ளது. உதாரணமாக,

உப்புக்காற்று வருடியது
சுவையாக.

உப்புக்காற்றுக்கு எதிர்ப்பதமாக சுவையாக என்று உள்ளது. எனக்கு இது சரியா என்று புரிபடவில்லை.

மற்றொன்று,

எதிர்காலம் AI-யில்...;
நிகழ்காலம் EMI-யில்...

எனக்கு பிடித்த மேலும் சில கவிதைகள்,

காசுக் கொடுத்துச் சாப்பிட்டான்
அன்னதான விருந்தில்.

மற்றொன்று,

அசுத்தம் சோறு போட்டது
தூய்மைப் பணியாளர்களுக்கு...

நான் இந்த கவிதைகளைப் படித்த போது எனக்கு தோன்றிய முரண் டூவிட்டு கவிதை:
புத்தகம் படித்தும்
புத்தி வரவில்லை.

மற்றொன்று,

ஆசிரியரிடம் அடி வாங்கினேன்
வாழ்க்கையில் உயர்ந்தேன்.

இந்த இரண்டும் முரண் டூவிட்டு வகையைச் சேருமா என்று எனக்குத் தெரியவில்லை. கவிஞரின் இந்தக் கவிதைகளை ரசித்து படித்ததினால் எனக்கும் தோன்றியது.

தமிழுக்கு புதிய கவிதை வடிவத்தை உருவாக்கிய முனைவர் நீலநிலா செண்பகராஜன் அவர்கள் மேலும் பல புதிய கவிதை நூல்களை படைக்க அன்பும் வாழ்த்துகளும்.