A few words about item

பித்தன் - அப்துல் ரகுமான்

கவிஞர் அப்துல் ரகுமான் அவர்களின் "பித்தன்" என்னும் இந்த கவிதைத் தொகுப்பு 26 கவிதைகளுடன் 104 பக்கங்களைக் கொண்டது. 19.07.1998 அன்று நிகழ்ந்த கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் மணி விழாவின் போது முதல்வர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை இப்ப புத்தகத்தில் வந்துள்ளது. அந்த உரையின் போது கலைஞர் மு.கருணாநிதி அவர்கள், "இந்தக் கவிதைகளை படித்த பின் அப்துல் ரகுமானின் பித்தனாகவே ஆகி விட்டேன்" என்று கூறியுள்ளார்.

கவிதைகள் அனைத்தும் எதிரெதிராய், முரண்தொடையாய் அமைந்திருக்கிறது.
புத்தகத்தின் முதல் கவிதை அம்பலம்.

'அனாதையை ஆதரிப்பார்
யாருமில்லையா?' என்று
பித்தன் கடைத் தெருவில்
கூவிக்கொண்டிருந்தான்.

'யார் அந்த
அனாதை?' என்று கேட்டேன்.

'உண்மை' என்றவன்,
'கடைத் தெருவில்
அது அனாதையாக
அழுதுகொண்டிருந்தது.
அதை யாருமே
அடையாளம் கண்டு கொள்ளவில்லை'
என்று கூறினான்.

'ஏன்?' என்றேன்.

'நெற்றியில்
திருநீறோ, நாமமோ
இல்லை;
மார்பில்
சிலுவை இல்லை;
தலையில்
தொப்பியில்லை.
அதனால் அதை
யாருமே
அடையாளம் கண்டுகொள்ளவில்லை'
என்றான்.

உண்மையில், 'உண்மை' இன்னும் நடுத்தெருவில் அனாதையாக அழுது கொண்டுதான் இருக்கிறது. ஒருவேளை உண்மை மத வேடம் பூண்டு அழுது கொண்டிருந்தால் சமயவாதிகள் யாரேனும் ஒருவர் அரவணைத்திருப்பார்.
"வினா" என்ற கவிதையின் இறுதியில்,

வாழ்க்கைத் தேர்வில்
வெற்றி பெறுகிறவர்கள்
விடைகளை அறிந்தவர்கள் இல்லை;
வினாக்களை அறிந்தவர்களே.
என்று பித்தன் கூறுவதாக அப்துல் ரகுமான் கூறுகிறார்.
பக்கவாதம் என்ற கவிதையில்,

-------------------------------
ஒன்றை
நல்லது என்கிறீர்கள்;
ஒன்றைக் கெட்டது என்கிறீர்கள்.
இது குருட்டுத் தீர்ப்பல்லவா?

உங்கள்
விருப்பும் வெறுப்பும்
நீதிபதிகளாக இருக்கின்றன.
--------------------
போர்வையைக்
குளிர்காலத்தில்
நல்லது என்கிறீர்கள்;
கோடைக் காலத்தில்
கெட்டது என்கிறீர்கள்.
போர்வையில் இல்லை
நல்லதும் கெட்டதும்.
---------------------
நெருப்பு
நல்லதா? கெட்டதா?

நெருப்பு
நெருப்பாக மட்டுமே
இருக்கிறது.
நீங்கள்தான் அதை
நல்லதாகவோ
கெட்டதாகவோ
ஆக்கிக்கொள்கிறீர்கள்.

இக்கவிதையில் நாம் எதையெல்லாம் சரியில்லை என்கிறோமோ அதற்கு வேறு ஒரு பார்வையை பித்தன் காட்டுகிறான்.

நாம் எப்போதுமே முன்னோக்கியே பயணம் செய்வோம். ஆனால் பித்தன், "பின்பக்கமாக நடந்து கொண்டிருக்கிறான். ஏனென்று கேட்க, 'திரும்புகிறேன்' என்கிறான். அவன் மேலும் கூறுகிறான். புறப்படுதல் அல்ல, திரும்புதல் தான் பயணம். வெளியே புறப்படுதல் அல்ல, வெளியிலிருந்து புறப்படுதல்தான் பயணம். நீங்கள் உங்களிடமிருந்து புறப்படுகிறீர்கள். அதனால்தான் நீங்கள் ஊர் போய்ச் சேர்வதில்லை. உங்களை நோக்கிப் புறப்படுங்கள். அதுதான் பயணம்." என்று ஒரு புதிய பார்வையை நம்மிடத்தில் பாய்ச்சுகிறான். இதைப் போலவே "அவதாரம்" என்றொரு கவிதை.


எல்லோரும்
மலையின் மீது
ஏறிக்கொண்டிருந்தபோது
பித்தன் மட்டும்
கீழே
இறங்கிக் கொண்டிருந்தான்.

'நீ ஏன்
இறங்கிக்கொண்டிருக்கிறாய்?'
என்று கேட்டேன்.

'மேலே செல்வதற்காக'
என்றான்.

அவன் மேலும் சொன்னான்:

கீழே விழும்
விதைதான்
மேலே செல்கிறது.
-------------------------
தராசில் கனமான தட்டே
கீழே இறங்குகிறது.

அரியாசனத்தில்
ஏறுகிறவனுக்கல்ல;
இறங்குகிறவனுக்கே
இதிகாசம் கிடைக்கிறது.

இதே போலவே இருள், கதவு, வீடு, பசி, உறக்கம் போன்ற கவிதைகளில் எதிர்பார்வையில் பித்தன் பேசுவதாக கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்கிறார். தீக்குச்சி என்றோரு கவிதை. தீக்குச்சியை பயன்படுத்திய பின் நாம் தூக்கி எறிவோம். ஆனால் பித்தனோ, தீக்குச்சியை வணங்குகிறான். ஏனென்றால், 'ஏற்றப்பட்டதை விட ஏற்றிவைத்தது உயர்ந்ததல்லவா?" என்று புதுமொழி பகிருகிறான். மேலும் புத்தகம் என்ற கவிதையில், "குழந்தைகளின் கையில் இருந்த புத்தகங்களைப் பார்த்து, 'புத்தகங்களே! சமர்த்தாயிருங்கள். குழந்தைகளைக் கிழித்து விடாதீர்கள்' " என்கிறான்.

காயம் என்றோரு கவிதை.

-----------------------
உங்கள் இதயங்களைக்
காயங்களால்
அலங்கரியுங்கள்.
காயங்களால்தான்
நீங்கள்
பிரகாசிப்பீர்கள்.

காயம்படும் ஓலைதான்
சுவடியாகிறது.

காயம்படும் கல்தான்
சிலையாகிறது.

காயம்படும் மூங்கில் தான்
கானம் பாடுகிறது.
---------------------------
காயங்கள் இல்லையென்றால்
உங்கள் இதயப் பாத்திரம்
காலியாக இருக்கிறது
என்று அர்த்தம்.

காலிப் பாத்திரம்
வைத்திருப்பவர்களே!
காயங்களை
யாசியுங்கள்.

நண்பர்களே! நண்பிகளே!! கவிக்கோ அவர்கள் சொல்வது போல் நீங்களும் காயம்படுங்கள்; இத்தமிழ்ச்சமூகத்திற்கு கவிதை படையுங்கள்.

Total Number of visitors: 38

No of users in online: 24