A few words about item

மெளனத்தின் சப்தங்கள் - வைரமுத்து

1980-ஆம் ஆண்டின் மூன்றாவது மாதத்தில் திரைத்துறையில் கவிதை எழுத வந்த வைரமுத்து அவர்கள் இந்த நான்கு வருட சினிமா வாழ்க்கையில்(முதல் பதிப்பு ஆகஸ்ட் 1984) தான் கேட்ட, பெற்ற திரையுலகைப் பற்றிய அனுபவங்களை 19 கட்டுரைகளாக 128 பக்கங்களில் "மௌனத்தின் சப்தங்கள்" என்ற நூலாகக் கொண்டு வந்திருக்கிறார். முதல் கட்டுரை "மாறிப்போன பல்லவிகள்". பாடல் எழுதுகின்ற போது காட்சிக்குத் தகுந்த வரிகளை எழுதிய பிறகு சில நேரங்களில் அந்த வரிகள் மாற்றப்படுகின்றன சில காரணங்களுக்காக. அப்படி மாறிய ஒரு சில பல்லவிகளை கொடுத்துள்ளார் வைரமுத்து.

ராஜபார்வை படத்தில்,
'
திராட்சை மது 
வழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது!' என்ற பல்லவி

'அந்தி மழை
பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது!' என்றும்,

பயணங்கள் முடிவதில்லை என்ற படத்திற்கு

' சலவை நிலா பொழிகிறதே
இதயம்வரை நனைகிறதே!' என்ற பல்லவி

'இளைய நிலா பொழிகிறதே
இதயம்வரை நனைகிறதே!'

என்று மாற்றம் ஏற்பட்டதை குறிப்பிடுகிறார்.

அதே நேரத்தில் இந்த பாடல்களில் ஏற்பட்ட மாற்றம் குறித்து கட்டுரையின் இறுதியில் எழுதும் போது, "எழுத வந்த ஆரம்ப மாதங்களில் மாற்றம் என்பது என் பாடலைச் சிதைக்கிற விஷயமாகவே எனக்குத் தோன்றியது. காலம் செல்லச் செல்லக் கற்றுக் கொண்டேன். மாற்றம் என்பது சிதைப்பது அன்று, செதுக்குவது. ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் சுத்தமான தோலுரிப்பு அது!. ஆனால் ஒன்று - எல்லாமே மாற்றத்திற்கு உட்பட்டாக வேண்டியதன்று; எதுவுமே மாற்றத்துக்கு உட்படாததுமன்று." இன்று கூறியுள்ளார்.

"நீங்கள் ஏன் தத்துவப் பாடல்கள் அதிகம் தரவில்லை?" என்ற ரசிகர்கள் வைக்கும் குற்றச்சாட்டுக்கு 'கதைக்கு தான் பாடலே தவிர, பாடலுக்குக் கதை அல்ல.' கதை எதைக் கட்டளையிடுகிறதோ, கவிஞனும் இசையமைப்பாளனும் அதற்குத்தான் கட்டுப்பட வேண்டியிருக்கிறது என பதில் அளித்துள்ளார்.

"பழையதும் பழைமையும்" எனும் கட்டுரை, திரைத்துறையில் புதிதாக நுழைபவர்கள் தன் முன்னோடிகளைப் பற்றி தெரிந்து கொள்வதும், முன்னோடிகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியவற்றையும்  கூறியுள்ளார். "நம் முன்னோர்கள் நட்ட பயிர்கள் விளைந்திருந்தால் அவற்றை அறுத்துக்கொண்டும், அழுகிப் போயிருந்தால் அவற்றை உரமாகிக் கொண்டும் பயணப்படுவதே பரிணாமம்" என்றும் "பழையது என்பது ஒரு கிளையில் பழுத்து உதிரப்போகும் சருகைப் போன்றது. பழைமை என்பது உதிர்ந்த சருகு இருந்த இடத்தில் புதிய தளிரை உற்பத்தி செய்யும் வேரைப் போன்றது" என்றும் "நம் முன்னோர்களில் ஒவ்வொருவரிடமும் வேருக்கு நீராகும் விஷயம் இருக்கிறது. அவர்கள் இளைய தலைமுறைக்குப் பாடமாகும் பள்ளிக்கூடங்கள்" என்றும் சொல்லி இதை எல்லாம் கூறக் காரணம் "இளம் கலைஞர்கள் ஒவ்வொருவருக்கும் தாங்கள் அளந்து பார்க்க அஸ்திவார வேண்டும்" என்பதற்காகவும் அதுமட்டுமில்லாமல் இளம் கலைஞர்கள், "தகுதி வருவதற்கு முன் வாய்ப்பு வந்துவிட்டால் வாய்ப்பு வந்த பின்பாவது தகுதியை வளர்த்துக் கொள்வது தக்கது" என்றும்  என்று அறிவுரை கூறியுள்ளார்.

"வெறும் செல்பவர் மட்டும் நேசிக்கிற, சொல்லப்படுபவர் எவராலும் நேசிக்க முடியாத ஓர் உரை அறிவுரை" என்று கூறி சொன்னது யாவும் எனது எண்ணங்களே என்கிறார்.

"இசை இலக்கியம்" என்ற கட்டுரை "திரைப்படப் பாடல் இலக்கியமாகுமா?" (அ) "திரைப்படப் பாடல் இலக்கியமாக ஆகவேண்டுமா?" (அ) "இலக்கியம் திரைப்பாடல் ஆக முடியுமா?" என்ற கேள்விகளுக்கு, "எல்லாப் பாடல்களும் இலக்கியமாகிவிடும் என்பது மூடநம்பிக்கை. எந்தப் பாடலுமே இலக்கியமாக முடியாது என்பது அவநம்பிக்கை" என்று சில பாடல்களை உதாரணம் கூறி விளக்கியுள்ளார்.

மேலும் திரைப்படத்துறையில், "இரட்டை அர்த்தங்கள், பாடல்கள் நிலை, பரிந்துரை, திரைப்பட கலைஞர்களின் கர்வம், திரைத்துறையில் பழையவர்களை மறத்தல்" என பல கட்டுரைகளை எழுதி உள்ளார் கவிஞர் வைரமுத்து அவர்கள். இப்புத்தகம் அவருடைய நான்கு வருட திரையுலகைப் பற்றிய அனுபவங்களை மட்டும் பதிவு செய்துள்ளது. அதன் பிறகு வைரமுத்து அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அனுபவம் என்பது மிகப்பெரிய கடல். அவற்றையெல்லாம் அவர் புத்தகமாக வந்துள்ளதா என்பது தெரியவில்லை. ஒருவேளை இல்லை எனில் தனது மீதி அனுபவங்கள் எல்லாவற்றையும் கொண்டு வந்தால் திரைப்படத்துறையில் நுழைபவர்களுக்கு அது ஒரு கையேடாக அமையும்.

Total Number of visitors: 17

No of users in online: 2