மாசி வீதியின் கல்சந்துகள்
மாசி வீதியின் கல்சந்துகள் - சீனு ராமசாமி

மாசி வீதியின் கல்சந்துகள் - சீனு ராமசாமி

கவிதைக்கும் கவிஞனுக்கும் தான் காலவரையறைகள் எதுமில்லை, கவிதைக்கும் கவிஞனுக்கும் இடையே உள்ள பந்தம் அவன் எதிர்கால கனவுகளை சுமந்தும் நிகழகால துயரத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவும் இறந்தகால சுக நரக நினைவுகளை அசைபோடவும் கவிதையின் மொழி அறிந்து அதனை தனக்கு சாதகமாக கையாளத் தொடங்கி அதனை காலம் காலமாக இச்சமுதாயத்திற்கு கடத்தித் தருகிறான்.

கவிதையின் மொழி ஓர் ஆச்சர்யமானது. அதனை இலாவகமாக கையாளும் கவிஞனே காலத்தின் ஓட்டப்பாதையில் எதிர்நீச்சலிட்டு காலம் கடந்தும் பல வாசர்களோடு கைகுலுக்கி கண்ணீரையோ புன்னகையோ அவன் மனதில் உண்டாக்கி உணர்வால் உறையவைக்க இயலும்.

அத்தகைய வினையினை போகிற போக்கில் ஆழமாக அழுத்தி எளிய சொற்களால் உள்ளத்தில் நுழைந்து உணர்வுகளை தூண்டிச்செல்லும் கவிதைகளாய் "மாசி வீதியின் கல்சந்துகள்"என்கிற இத்தொகுப்பு முழுவதிலும் தந்திருக்கிறார் கவிஞரும் இயக்குநருமான சீனுராமசாமி அவர்கள்.

"மவுனத்தினை" விமர்சனம் செய்யும் ஒரு கவிதையில்,

"ஒலியற்ற 
காற்றுப் புகாத
உச்சரிக்கத் தயங்கும் 
சொற்கள் யாவும் 
எனக்கு ஒளிரும் கிரீடம்

படைப்புக்கு
வேர்வரை சென்று 
பாய்ந்து தொடும் 
உன் மவுனத்தின் 
ரகசியக் கிளர்ச்சி"

எண்ணங்கள் நிறைந்து தொண்டைக்குழியில் உருளும் சொற்களுக்கு இத்தகைய உயரத்தினைத் தந்து இறுதியில் உன் மவுனத்தின் ரகசியக் கிளர்ச்சி என்னும் வரியில் கவிதை தன் உச்சதினை எட்டி நுணுக்கமாக நிற்கிறது.

"பயம்" என்கிற கவிதையிலும்,

"ஒளி ஊடுருவி அலையும் 
நீத்தார் உருவங்கள் 
என்ன செய்யும் 

அவன் ஊன்று கோலில் 
அமர்ந்து நீர் எருமை காகமெனத் 
ததும்பும் 
கண்ணிழந்தவனுக்குப் 
பேய்கள் 
காட்சியில் இல்லை".

"ஒளி ஊடுருவி அலையும் 
நீத்தார் உருவங்கள்". - இந்த இரண்டு வரிச் சொற்களைக் கண்டு வானத்தைப் பார்த்து வியந்து நிற்கின்றேன். ஆன்மாவுக்கு இத்தகைய அறிவியலும் ஆன்மீகமும் கலந்த தத்துவ ரீதியான கருத்தாடலை என் வாசிப்பின் நெடும் ரேகையில் எங்குமே காணக்கிடைக்காமல் போனதை எண்ணி எண்ணி தனிப்பெரும் வியப்பாகிப் போகிறேன்.

கண்ணிழந்தவர்கள் இருளின் உருவங்களை தடவி அறிவதை தவிர அரூபங்களை அறிவதற்கான காட்சிகள் ஏதுள்ளனயிங்கு.

"அழகின் அறிவு" என்கிற மற்றொரு கவிதையில்,

ஒரு விழியிலிருந்து 
மறுவிழி செல்லும் 
புருவ இணைப்பில் 
நீ மையிடும் போது 
பிறந்தனவா?
மலையை இணைக்கும் நதியின் 
கயிற்றுப்பாலம் 
அனார்கலி.

பெண்ணின் புருவத்தையும் அதற்கிடையில் சூட்டும் திலகத்தையும் இவ்வளவு எளிதான சொற்களை கொண்டு இயம்பும் உவமை கண்டு லைக்கச் செய்கிறது இக்கவிதை.

"நிலை" என்னும் கவிதையில்,

ஒரு நாளும் 
ஒரு வேளையும் 
என் பசியைச் சொற்களில் 
சொன்னதில்லை, 
கண் பார்த்து மௌனத்திருப்பேன் 

அறிந்து தரும் 
தாயின் மகன் நான் 

இங்கு 
திசையெல்லாம் 
கையேந்தச் சொல்கிறது 
அற்ப வாழ்வு.

தாயின் பாசத்தை இந்த வாழ்வியலோடு ஒப்பிட்டு பார்க்கும் போதுதான் தெரிகிறது வாழ்க்கையின் மீதான பெரும் கசப்பு.

"தெய்வீக அன்பு" என்கிற கவிதையில்,

பாலருந்திய 
நிலையிலேயே 
குழந்தை 
தூங்குகிறது 
தாயும் தூங்குகிறாள் 
அங்கு தெய்வம் 
கண் விழித்திருக்கிறது.

உண்மைதான். இக்கவிதை கருணை நிறைகிற ஒவ்வொரு இடத்திலும் கடவுள் கண்விழித்துக்கொள்கிறார். அது பெரும்பாலும் தாய்க்கும் சேய்க்கும் இடையிலேயே நிகழ்ந்தாகிறது இப்பிரபஞ்சம் முழுவதிலுமே.

"மயக்கம்" என்கிற கவிதையில்,

மயக்கங்கள் இன்றிக் 
கலையேது கவியேது 
ஞானிகள் பூவுலகில் உண்டோ?

மயக்கம் உறக்கமல்ல 
விழிப்பில் 
நிதானமிழக்கும் 
செயல் 

அது இல்லையெனில் 
விரும்பி அருந்தப்படாது விஷம் 
சேமிக்க 
முடியாது 
வாழ்வை.

ஒவ்வொரு கலைஞனும் ஒவ்வொரு விதமான மயக்க நிலையினை அடையும் போதே அவனின் அசாத்திய திறமைகள் கலைகள் காவியங்கள் தோன்றுகின்றன. உண்மையில் மயக்கம் என்பது விழிப்பில் நிதானமிழந்த ஒரு செயல்; அச்செயல் நிகழ்கிற வரையில் மனிதனுக்குள் இருக்கிற கலை விழித்துக்கொள்கிறது. இத்தகைய மயக்கம் தீர்ந்து போகுமானால் மனிதத் தன்மையிலிருந்து விலகி நடமாடும் திடப்பொருளாகிறான் மனிதன்.

இத்தொகுப்புக்கு ஏற்ற "மாசி வீதியின் கல்சந்துகள்" என்கிற தலைப்பு கொண்ட இக்கவிதையினை வாசகர்கள் வாசிக்கும் பொழுது இத்தொகுப்பின் முழு தன்மையினை எனைப் போல நீங்களும் உணர்ந்துக் கொள்ளவிரும்புகிறேன்.

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைக்கும் கவிஞருக்கும் என் எளிய அன்பும் வாழ்த்தும்.