A few words about item

காஞ்சி சுந்தரி - கலைமாமணி விக்கிரமன்

பல்லவர்களின் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளின் ஒரு பகுதியாக "காஞ்சி சுந்தரி" எனும் இப்புத்தகம் வெளிவந்துள்ளது. மாபெரும் புகழ் கொண்ட, மகேந்திரவர்மனின் திருக்குமாரர் மாமல்ல சக்கரவர்த்தியின் வம்சம் வழியே வந்த மன்னன் பரமேஷ்வர வர்மனையும், அவருடைய புதல்வன் இராஜசிம்மனையும் இந்நாவல் மையம் கொண்டுள்ளது. இன்றும் தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கும் "மாமல்லபுரம்" தோன்ற காரணமாக இருந்த பல்லவர்களின் கலை ஆர்வம் வியக்க வைக்கிறது.

மன்னர்கள் என்றால் நாட்டை ஆட்சி செய்தல், போர் புரிதல், பிற நாட்டைக் கைப்பற்றுதல் என மட்டுமல்லாது இசை, சிற்பம், ஓவியம், நடனம் என பல்லவர்களின் ஆட்சிக்காலம் கலைநயம் மிக்கதாக விளங்கியுள்ளதை இச்சரித்திர புதினம் எடுத்துரைக்கிறது. தன் பாட்டனார் ஆரம்பித்து வைத்த சிற்பப்பணிகளை தன்னுடைய ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றியே தீருவேன் என்ற துடிப்புடன் செயலாற்றும் இராஜசிம்மன் எனும் இக்கதையின் நாயகன் கலா ரசிகனாக வலம் வருகிறான்.

கலைமாமணி விக்கிரமன் அவர்கள் வழக்கம் போல் தனக்கே உரித்தான பாணியில் கவர்ந்திழுக்கும் தன் சொற்களால் மெருகேற்றி அற்புதமாக இப்புதினத்தை படைத்துள்ளார். விறுவிறுப்பும், வேகமும் கூட்டி காட்சிகளை கண் முன் நிறுத்துவது போல் அமைந்தமையால் வெகு விரைவில் நாவலை வாசிக்க முடிகிறது. காதல், கோபம், வீரம், சோகம், அழுகை, பிரிவு, வெற்றி, தோல்வி, பழிவாங்கும் உணர்வு, வியப்பு, கடமையுணர்ச்சி, அன்பு, நட்பு, துரோகம் என இதில் குறிப்பிட்டுள்ள அனைத்து விதமான உணர்வுகளையும் நமக்குள் உணரச் செய்து விடுகிறார் ஆசிரியர். இதுவே எழுத்தாளர் விக்கிரமன் அவர்களின் சிறப்பாக நான் கருதுகிறேன்.

கதையின் தொடக்கத்தில் இளவரசன் இராஜசிம்மனின் இளம்பிராயத்து நண்பனாக, வாதாபியில் இருந்து வரும் விஜயன் எனும் இளைஞன் ஆரம்பம் முதல் இறுதி வரை பயணிக்கிறான். சித்திரக்கலையும் அஜந்தாவின் அழியா வர்ண இரகசியத்தையும் அறிந்து கொண்டு நண்பனின் ஆசையை நிறைவேற்ற எண்ணி கலை ஆர்வத்தோடு காஞ்சி நோக்கி வரும் விஜயன், கதையின் நாயகியான சுந்தரியை மல்லிநாதர் எனும் சிற்பின் வீட்டில் சந்திக்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் விரும்புகிறார்கள். பழிவாங்கும் எண்ணத்தோடு வாதாபியில் இருந்து வந்த சுந்தரி சிற்பியின் அன்பையும் விஜயனின் காதலையும் உணர்ந்து தன் எண்ணத்தை மாற்றிக் கொள்கிறாள்.

இதற்கிடையே சிற்பி மல்லிநாதர் எதிரிகளால் கடத்தப்படுகிறார். மற்றுமொரு நாயகியாக வரும் நாட்டிய கணிகை காஞ்சனா எப்படியாவது காஞ்சிக் கோட்டையின் இராஜநர்த்தகியாக வாழ வேண்டும் என்று துடிக்கிறாள். சாளுக்கிய நாட்டு இளவரசனான விநயாதித்தனை விஜயன் என்று தவறாக எண்ணி அவனோடு பழகுகிறாள். இளவரசனின் நண்பனோடு பழகினால் தான் அரசரிடம் சென்று முறையிட்டு தன் நடனத்திறமையால் இராஜநர்த்தகியாகி விட வேண்டும் என்பது காஞ்சனாவின் இலட்சியம்.

குதிரைப்படைத் தலைவனாக வரும் குமாரதேவன் தன்னுடைய முற்காலத்தைப் பற்றி சுந்தரியிடம் தெரிவிப்பதன் மூலம் காஞ்சனாவும் சுந்தரியும் இரட்டை சகோதரிகள் என உறுதியாகிறது. அவர்களிருவரும் ஏன்? எப்படி? காஞ்சிக்கு வந்தார்கள் என்பது கதையில் உள்ளது.

காஞ்சியை முற்றிலுமாக அழிக்க வேண்டுமென்று முயற்சி செய்து தோல்வியடைந்த சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தனின் அவமானத்தை துடைத்தெறிய எண்ணி, சூளுரை பூண்டு புறப்படும் இளவரசன் விநயாதித்தனும், அவனுடைய தம்பி கீர்த்திவர்மனும் சதித்திட்டம் போகிறார்கள். இது ஒரு புறம் இருக்க, எதிரி நாட்டவர் காஞ்சிக்குள் புகுந்து போர் தொடுக்கும் முன், நம் படைகள் சென்று சாளுக்கியர்களை வேரோடு சாய்க்க வேண்டுமென்று மன்னர் பரமேஷ்வரவர்மனின் இலட்சியம் ஒரு பக்கம், தந்தையின் உடல்நிலை சரியில்லை என்ற கவலை ஒரு பக்கம், எதிரிகள் பலவாறாக மாறுவேடத்தில் காஞ்சிக்குள் பதுங்கி இருக்கும் செய்தி ஒரு பக்கம், சிற்பி மல்லிநாதரை தேடும் பணி ஒரு பக்கம், தன்னுடைய முப்பாட்டனார் மகேந்திர வர்மனால் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட "பரவாதினி" எனும் அற்புத வீணை காணாமல் போன வியப்பு,ம் ஏமாற்றமும் ஒரு பக்கம், சிற்பக்கலையை மேம்படுத்துவதற்கான ஏற்பாடுகள் ஒரு பக்கம் என இளவரசன் இராஜசிம்மன் நிறைவேற்ற வேண்டிய கடமைகளும் கட்டாயமும் அவரை சூழ்ந்துள்ளன.

இறுதியில், இராஜசிம்மன் தன் கடமைகளை நிறைவேற்றினாரா? விஜயன்-சுந்தரி காதல் கைகூடியாதா? காஞ்சனாவின் கனவு நிறைவேறியதா? சிற்பி மல்லிநாதர் என்ன ஆனார்? விநயாதித்தன்-கீர்த்திவர்மன் இவர்கள் திட்டம் என்ன ஆனது? என்பதை மீதி கதை.

Total Number of visitors: 17

No of users in online: 2