A few words about item

கையில் அள்ளிய கடல்-கலைஞர் கருணாநிதி

கலைஞர் கருணாநிதி அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டிகள், கேள்வி-பதில்கள் "கையில் அள்ளிய கடல்” என்ற நூலாக வெளிவந்துள்ளது. இப்பேட்டிகள் மற்றும் கேள்வி பதில்கள் குங்குமம், சுபமங்களா, தமிழன் எக்ஸ்பிரஸ், ஆனந்த விகடன், இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆப் இந்தியா, இந்து, கல்கி, ஜூனியர் விகடன், பிரண்ட்லைன், துக்ளக், சாவி, சிங்கப்பூர் தமிழ் முரசு போன்ற பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.

கேள்வி பதில்களில் கலைஞர் அவர்கள் கலை, இலக்கியம், சமுதாயம், அரசியல் போன்ற பல்வேறு வகையான கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அவரிடம் எந்த விதமான கேள்விகளைக் கேட்டாலும் அதற்கு சலிக்காமலும், சளைக்காமலும் பதில் அளித்துள்ளார். 15.03.96 அன்று ஆனந்த விகடன் அவருடைய கடித அனுபவங்கள் பற்றி மட்டும் ஒரு பேட்டி கண்டுள்ளது. அதில் "அவர் எழுதிய கடிதங்களிலேயே மறக்க முடியாத உருக்கமான கடிதம் எது..?" என்ற கேள்விக்கு,

"வள்ளுவர் கோட்டத் திறப்பு விழா நடத்தபோது முரசொலியில் நான் எழுதி வெளியாகிய மூன்று பக்க கடிதம்" என பதில் அளிக்கிறார்.

ஏனெனில் அப்போது தான் அவர் ஆட்சி கலைந்து 10 நாட்களே ஆகியிருந்தன. மேலும் அவரை சிறுமைப்படுத்துவதற்காக அவர் கட்டிய வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவிற்கு அவர் வைத்த கல்வெட்டு நீக்கப்பட்டு அந்த விழாவில் அவர் கலந்து கொள்ள கூடாது என்று அழைப்பிதழ் கூட தாமதமாக அனுப்பியுள்ளார்கள்.

சர்க்காரியா கமிஷன் விசாரணையையொட்டிய கேள்விக்கு கலைஞர் பதில் அளிக்கையில், "முதல்வர் அருமை நண்பர் எம்.ஜி.ஆர்(கலைஞர் இப்படித்தான் பல இடங்களில் குறிப்பிடுகிறார்) அவர்களும், கல்யாணசுந்தரம் அவர்களும் 56 குற்றச்சாட்டுகளை கொடுத்தார்கள். இம்மாதிரி வந்த குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக விவரமான பதிலை எழுதி அதை சட்டசபையில் வைத்தது இந்தியாவிலேயே எங்கள் ஆட்சி ஒன்றுதான். அந்த குற்றச்சாட்டுப் பட்டியலில் என்னவெல்லாம் எழுதியிருந்தார்கள் என்பது எம்ஜிஆருக்கே தெரியாது. ஆகையால் தான் எம்.ஜி.ஆர் தனது வாக்குமூலத்திலேயே இந்த குற்றச்சாட்டுகளின் விவரம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டார்.

அந்த 56 குற்றச்சாட்டுகளில் எல்லாமாகச் சேர்ந்து மொத்தம் 50 லட்ச ரூபாய்க்கு தான் ஊழல் நடந்ததாகக் கூறப்பட்டது. அதில் வீராணம் திட்டம் முக்கியமான ஊழலாகக் குறிப்பிடப்பட்டு, 40 லட்ச ரூபாய் ஊழல் என்று கூறப்பட்டது. டெல்லியில் இது தொடர்பாக ஒரு அமைப்பு, சர்க்காரியா கமிஷனில் வழக்காடிய போது, இறுதியாக சர்க்காரியா கமிஷன், லஞ்சம் வாங்கியதற்கான எந்த ஆதாரமும் கிடையாது என்று கூறிவிட்டது.

இந்த கமிஷன் விசாரணையையொட்டி என் மீது வழக்குப் போடலாம் என்று அருமை நண்பர் எம்.ஜி.ஆர் 1977-இல் முதலமைச்சராக இருந்தபோது ஒரு முயற்சி செய்தார். இதற்காக அப்போதைய அட்வகேட் ஜெனரல் வி.பி.ராமன் அவர்களிடம் அபிப்பிராயம் கேட்டார். அவர் வழக்கு நடத்தி வெற்றி காண்கிற அளவுக்கு இவற்றில் எல்லாம் எந்த ஆதாரமும் இல்லை என்று திட்டவட்டமாக சட்டபூர்வமான தன் கருத்தைத் தெரிவித்துவிட்டார்" என்று பதிலளிக்கிறார்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், வீராணம் திட்ட ஊழல் விசாரணையில் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யக்கூடாது என்று சர்க்காரியா கூறிவிட்டதால் வழக்கு விசாரணையில் இருந்து கருணாநிதிக்கு ஆஜரான வக்கீல் ஷாந்திபூஷன் அவர்கள் வெளியேற்றம் செய்து விட்டார்.

மேலும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில ஏட்டிற்கு அளித்த பேட்டியில், எம்ஜிஆரை திமுகவிலிருந்து வெளியேற்றும் முடிவை அவசர கோலத்தில் எடுத்தது நெடுஞ்செழியன் என்று கூறுகிறார்.

விடுதலைப் புலிகள் விஷயத்தில் பிரபாகரன் அவர்களது அணுகுமுறை எம்ஜிஆர் மற்றும் கருணாநிதி இருவரிடமும் வெவ்வேறாக இருந்துள்ளது. ஆனால் ராஜீவ் காந்தி மரணம் பற்றி விசாரித்த ஜெயின் கமிஷன் அறிக்கையோ, "கருணாநிதி ஆட்சியின் போது தமிழகத்தில் விடுதலை புலிகளின் ஆதிக்கம் அதிகமாயிற்று என்றும் எம்ஜிஆரின் அணுகுமுறையை பாராட்டியும் வந்திருந்தது". இது ஒரு திட்டமிட்ட களங்கம் என்றாலும் கருணாநிதி அதற்கான பதில்களையும் தெளிவாக தெரிவித்துள்ளார்.

கலைஞர் அவர்கள் தான் அடிக்கடி பயன்படுத்தும் திருக்குறளாக சுட்டிக்காட்டி உள்ள திருக்குறள்,

"நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை".


இத்தனை வருட அனுபவத்தில் தாங்கள் கற்றுக்கொண்ட முக்கிய பாடம் என்ன? என்ற கேள்விக்கும் இக்குறளையே மேற்கோள் காட்டுகிறார்.

புத்தகத்திலிருந்து கலைஞர் அவர்களின் ஒரு சில பதில்கள்,

இதுவரை பெறாத வெற்றி எது?
தமிழனைத் தமிழனாகவே காணும் வெற்றி!

நீங்கள் திரும்பத் திரும்ப வாசித்த புத்தகம் எது?
கார்க்கி எழுதிய "தாய்".

உங்களை மிகவும் பாதித்த எழுத்து யாருடையது?
சந்தேகமென்ன;அண்ணாவின் எழுத்துத்தான்.

பலமுறை பார்த்து பரவசப்பட்ட திரைப்படம் எது?
தில்லானா மோகனாம்பாள்.

பால்தாக்கரே நாத்திகராகி விட்டாராமே?
பகத்சிங் நாத்திகரானதற்கும் பால்தாக்கரே நாத்திகர் ஆனதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது!

தமிழ்நாட்டில் வாழ்ந்த, உங்களுக்குப் பிடித்த அரசியல்வாதி, கவிஞர், எழுத்தாளர் யார்?
அண்ணா, பாரதிதாசன், மு.வரதராசன்.

Total Number of visitors: 7

No of users in online: 4