A few words about item

கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் - மீரா

1971 ஆம் ஆண்டு வெளியான கவிஞர் மீரா அவர்களின் கவிதை நூல் "கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்". நான் வாங்கியது பதினெட்டாம் பதிப்பு(செப்டம்பர் 2016). மொத்தம் 83 கவிதைகளையும் 120 பக்கங்களையும் கொண்ட இந்தக் கவிதைகள் "கனவுகள் + கற்பனைகள்" என்றும் "காகிதங்கள்" என்றும் இருபகுதிகளாக மீரா அவர்கள் பிரித்து எழுதியுள்ளார். புத்தகத்திற்கு எல்லோரும் முன்னுரை எழுதுவார்கள். ஆனால் மீரா அவர்கள் சற்று வித்தியாசமாக முடிவுரை என்று தொடங்கி கவிதைகளை எழுதி உள்ளார். இரு பகுதிகளாக வெளிவந்துள்ள இந்த கவிதைகள் வசன கவிதைகளாக உள்ளன.

கனவுகள் + கற்பனைகள் பகுதியில் உள்ள கவிதைகளை "கவிதையல்ல; ஆக்கிக் கொள்ளலாம்" என்றும் காகிதங்கள் என்ற பகுதியில் உள்ள கவிதைகளை "கதையல்ல; அமைத்துக் கொள்ளலாம்" என்றும் கூறியுள்ளார். கவிதை எழுதியவர்கள் அல்லது எழுதுபவர்கள் எல்லோரும் காதலித்து உள்ளார்களா என்பது தெரியாது; ஆனால் காதலித்தவர்கள் அல்லது காதலிப்பவர்கள் கவிதைகள் எழுதுவது என்பது நிச்சயம். 1971 காலக்கட்டத்தில் காதலித்தவர்களுக்கும், காதலிக்கத் தொடங்கியவர்களுக்கும் இந்தக் கவிதை நூல் ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருக்கும்.

எப்பொழுதும் ஆண்களின் பார்வை அழகான பெண்களை நோக்கியே செல்லும். ஆனால் இங்கோ ஒரு பெண் ஒரு ஆண் மகனைப் பார்க்கிறாள். அவன் அவளை பார்த்து இப்போது ஒரு கவிதை பாடுகிறான்.

உனக்கென்ன...
ஒரு பார்வையை
வீசிவிட்டுப் போகிறாய்...
என் உள்ளமல்லவா,
வைக்கோலாய்ப்
பற்றி எரிகிறது

உனக்கென்ன -
ஒரு புன்னகையை
உதிர்த்துவிட்டுப் போகிறாய்...
என் உயிரல்லவா,
மெழுகாய்
உருகி விழுகிறது.

இந்த கவிதையின் முதல் பாதியை இதயம் படத்தில் நடிகர் முரளி பயனபடுத்தியிருப்பார்.

காதலன் தன் காதலியைக் கண்டுபிடிக்கிறான். மீரா இவ்வாறு எழுதுகிறார்.

நியூட்டன்
புவியீர்ப்புச் சக்தியைக்
கண்டுபிடித்தான்

நான் என் உயிர் ஈர்ப்புச் சக்தியைக்
கண்டுபிடித்தேன்.

என் கண்டு பிடிப்பே,
நீ வாழ்க.


மற்றொரு கவிதையில்,

நீ வானத்தைப் பார்;
சூரியன் குளிரட்டும்.

நீ பூமியைப் பார்;
பாலைவனங்கள் குளிரட்டும்.

நீ என்னையும் பார்;
என் இதயமும்
கொஞ்சம் குளிரட்டுமே!

காதலன் எப்போதும் தன் காதலி தன் அருகில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறான் காதலிக்கும் போது. ஆனால் மீராவின் காதலன், "கோடை காலமோ; குளிர் காலமோ, எந்த காலத்திலும் உன் பக்கமே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்" என்கிறான்.

காதலிக்க ஆரம்பித்த பிறகு ஒவ்வொரு காதலனும் தன் காதலியிடம் எந்தப் பெண்ணையும் ஏறெடுத்து பார்த்ததில்லை என்பான். ஆனால் மீராவின் காதலனோ, 

பொய்யல்ல..
இதற்குமுன்
எந்தப் பெண்ணையும்
ஏறெடுத்துப் பார்த்ததில்லை

உன்னைப் பார்த்த பிறகு
எதிரில் வரும்
எந்த பெண்ணையும் விடுவதில்லை.

என் பார்வையில்
இருட்டில் கட்டிப்பிடிக்கும்
இச்சை எதுவும் இல்லை.

என் காதலிக்கு இணையாக
இன்னொருத்தி இருக்கிறாளா என்று
வெளிச்சத்தில் கண்டுபிடிக்கும்
ஒரேஒரு இலட்சியம் உண்டு.

இன்றுவரை... இன்றுவரை...
எனக்குத் தோல்வியே
என்று கூறுகிறான்.

படத்தை நாம் படமாக பார்ப்போம். ஆனால் மீரா படம் பார்த்த பிறகு கவிதை ஒன்றைப் படைக்கிறார்.

மதுரை வீரன் பார்த்த மயக்கத்தில்
ஒரு மதுரக்காட்சி...

நீ ஆற்று வெள்ளத்தில்
தத்தளிக்கிறாய்.
என்னைக் கரைசேர்க்கக் கூடாதா
என்று கதறுகிறாய்.

நான் மீன் குஞ்சாகிறேன்.
துள்ளிக் குதிக்கிறேன்.
தூண்டிலாய் மாறித்
தூக்கி வருகிறேன்.
நீ நன்றியை உதிர்த்துவிட்டு
நடையைக் கட்டுகிறாய்.

நான் அபயக்குரல் கொடுக்கிறேன்;
"என்னைக் கரைசேர்க்கக்கூடாதா?"

Total Number of visitors: 16

No of users in online: 6